மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காகவும் ஆற்றின் நீர்மட்டத்தைப் பராமரிக்கவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நீர் வளத்துறை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை
தமிழக அரசின் அரசாணையின்படி, வைகை அணையிலிருந்து ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 29 வரை மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 71 அடி முழுக் கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக உள்ள நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காகவும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் இன்று (24.04.2026) காலை 6:00 மணி முதல் விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் முதற்கட்டமாகத் திறக்கப்பட்டது. சீறிப்பாயும் இந்த நீரானது இணைப்பு கால்வாய் வழியாக வைகை ஆற்றைச் சென்றடைந்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்கள் வழியாகப் பயணம் செய்யும். இதனால் கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாம் என வைகை அணை அதிகாரிகள் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
