தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 10) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்கும் நிகழ்வு, இன்று திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெரம்பூர் தொகுதி உறுப்பினராக முதல்வர் ஜோசப் விஜய் முதலில் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த் (டி.நகர்), ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்) உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.
தவெக அமைச்சரின் சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படம்
இந்த பதவியேற்பு விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன். அவர் மேடையில் எம்எல்ஏவாகப் பதவியேற்க வந்தபோது, தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். தவெக அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன், மாற்றுக்கட்சியில் இருந்தபோதும் ஜெயலலிதா புகைப்படத்துடன் பதவியேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு வந்த பின்னணி
அதிமுகவின் மூத்த தலைவராகவும் முன்னாள் அமைச்சராகவும் நீண்ட காலம் பணியாற்றிய செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேறினார். பின்னர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவருக்கு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தற்போது 11-வது முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் வகித்த அதே அமைச்சர் அந்தஸ்தை தற்போதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
