தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரங்கேறியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக இன்று காலை 10 மணியளவில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய இந்த விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் அர்லேகர், விஜய்க்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். "சி.ஜோசப் விஜய் எனும் நான்" என்று அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
புதிய அமைச்சரவை மற்றும் முக்கியப் பிரமுகர்கள்
முதல்வர் விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கொண்ட சிறிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றது. இதில் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா, நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தினர்.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைப் பலம்
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவுக் கடிதங்களை வழங்கியதைத் தொடர்ந்து, மொத்தம் 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் ஆளுநரைச் சந்தித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று கோலாகலமாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
