தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய அரசுப் பேருந்து ஒன்றில் (பதிவெண்: TN45 M4853), வழித்தடத்தை அறிவிக்கும் டிஜிட்டல் எல்.இ.டி பலகையில் திடீரென நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள மின்னணுப் பலகைகளில் வழித்தட விவரங்களுக்குப் பதிலாகக் கட்சியின் பெயர் ஓடுவதைப் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, அரசுப் பேருந்தில் அரசியல் கட்சி விளம்பரமா என்ற கேள்வியையும் சர்ச்சையையும் எழுப்பியது.
மென்பொருள் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று விரிவான விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இச்சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையை இயக்கும் மென்பொருளை (Software), அடையாளம் தெரியாத சில நபர்கள் சட்டவிரோதமாக ஹேக் செய்து, இத்தகைய தவறான வாசகங்களைப் பதிவிட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, திட்டமிட்டுச் செய்யப்பட்ட மென்பொருள் ஊடுருவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை மற்றும் எச்சரிக்கை
குளறுபடி உறுதி செய்யப்பட்ட உடனே, அந்தப் பேருந்தின் மின்னணுப் பலகையில் இருந்த 'மதர்போர்டு' (Motherboard) மாற்றப்பட்டு, மீண்டும் சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன. இதுபோன்ற பாதுகாப்பு மீறல்கள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும், மென்பொருளைச் சிதைத்த நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் மின்னணுப் பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்குப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தெளிவுபடுத்தலின் மூலம் அரசுப் பேருந்திற்கும் அரசியல் கட்சிப் பெயருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
