தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பொதுவாக தேர்தல் தேதி வெளியிட்ட நிமிடத்திலிருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவது மிக முக்கியமான வழக்கமாகும். தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இவ்விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும், அரசும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
அரசு சார்பில் எந்தவொரு புதுத்திட்டங்கள், உதவி நலத்திட்டங்களை அறிமுக படுத்தவோ, செயல்படுத்தவோ கூடாது. அரசு அலுவலகங்கள், ஹெலிகாப்டர்கள், அரசு வாகனங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. அரசு பணியாளர்களை மற்றும் பொதுத் துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய இயலாது. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தவிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றிய தனிநபர் விமர்சனம் செய்யவது தடைச் செய்யப்படும்.
அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் புகைப்படங்கள் , சுவா் விளம்பரங்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளின் செலவிலேயே அகற்றப்பட வலியுறுத்தப்படுகிறது. பொது திடல்கள் போன்றவற்றை ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் பயன்படுத்தும் வகையில் அனுமதி வழங்கப்படும். வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவைகள் ஊழல் நடைமுறைகளாக கருதப்படும்.
பணம் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லும் போது அதற்கான ஆவணங்களை எடுத்து செல்ல வலியுறுத்தப்படுகின்றனர். அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் தேர்தல் பறக்கும் படையால் அவை பறிமுதல் செய்யப்படும். மேலும் தங்க நகைகள், பட்டுப் புடவைகள், வெள்ளி பொருட்கள் போன்ற பரிசுப் பொருட்களும் அதிக அளவில் எடுத்து செல்லும் பட்சத்தில் அதற்கான உரிய ஆவணங்களை அடுத்து செல்வது அவசியமானது. தேர்தல் பறக்கும் படையால் அனைத்தும் பரிசீலிக்கப்படும்.
