தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்புமுனையாக, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். முதலமைச்சருக்குப் பூங்கொத்து வழங்கி ஓ.பி.எஸ் தன்னை இணைத்துக்கொள்ள, அவருக்குப் பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் உற்சாகமாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்ட ஓ.பி.எஸ்ஸுடன், அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
தாய் கழகத்தில் இணைந்த மகிழ்ச்சி
இணைப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அண்ணா அவர்கள் தொடங்கிய அதிமுகவின் தாய் கழகமான திமுகவில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். திராவிடச் சித்தாந்தத்தைக் காப்பதில் முதன்மைத் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், சாதி மதப் பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் தாய் உள்ளத்தோடு அரவணைத்துச் செல்லும் அவரது ஆட்சி நிர்வாகம் பாராட்டுக்குரியது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். ஒரு பேரியக்கத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்குத் தளபதி ஒரு சிறந்த இலக்கணமாகத் திகழ்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அரசியல் எதிர்காலம்
தன்னுடைய இந்த முடிவு யாராலும் தூண்டப்பட்டது அல்ல, சுயமாகச் சிந்தித்து எடுத்த முடிவு என்று குறிப்பிட்ட ஓ.பி.எஸ், கடந்த காலத்தைப் பற்றித் தனக்கு இனி கவலையில்லை என்றும் மு.க.ஸ்டாலினே தனது தலைவர் என்றும் பிரகடனப்படுத்தினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வாய்ப்பளித்தால் உறுதியாகப் போட்டியிடுவேன் என்று தெரிவித்த அவர், இனி தளபதியின் ஒவ்வொரு முடிவிற்கும் தான் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி அளித்தார். தமிழக மக்கள் மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களையே முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறிய அவர், ஒரு சாதாரணத் தொண்டனாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவேன் என்று கூறினார்
