தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாளை (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அதேவேளையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
