இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர்த்த பிற மதங்களுக்கு மாறுபவர்கள், பட்டியல் சாதியினருக்கான (SC) அந்தஸ்தைப் பெற முடியாது என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு, கிறித்தவ மதத்தைத் தழுவி அதைப் பின்பற்றுபவர்கள் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவராகத் தொடர முடியாது என்று விளக்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் சிந்தடா ஆனந்த் என்பவர், தமக்கு எதிராகச் சாதி ரீதியான வசவுகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாகக் கூறி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கிறித்தவப் பாதிரியாராகப் பணியாற்றி வருவதால், அவருக்கு எஸ்.சி அந்தஸ்து கிடையாது என்றும், எனவே இந்தச் சட்டத்தின் கீழ் அவர் புகார் அளிக்க முடியாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற ஆந்திர உயர் நீதிமன்றம், ஆனந்த் மீதான புகாரைத் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் விளக்கம்
ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இந்து, சீக்கிய அல்லது பௌத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள். மற்றொரு மதத்திற்கு மாறுவது எஸ்.சி அந்தஸ்தை இழக்க வழிவகுக்கும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், மனுதாரர் மீண்டும் தனது பழைய மதத்திற்குத் திரும்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், சம்பவத்தின் போது அவர் ஒரு வீட்டின் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது அவர் கிறித்தவராகவே நீடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஒருவரிடம் எஸ்.சி சான்றிதழ் இருந்தாலும், அவர் மதமாற்றம் செய்திருப்பது நிரூபணமானால் அந்த அந்தஸ்து செல்லாததாகிவிடும் என்ற சட்ட நிலையை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
