தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி கிளையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வங்கியின் ஜன்னல் வழியாக கரும்புகை எழுவது கவனித்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பாடு
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே சம்பவம் நிகழ்ந்ததால், சிவராத்திரி காரணமாக அதிக வாகன நெரிசல் நிலவியது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சற்றே சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொருட்கள் சேதம்; விசாரணை தொடக்கம்
இந்த தீ விபத்தில் வங்கிக்குள் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
