மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்வது தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் பேராபத்து எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டிற்குத் தண்டனை வழங்கும் வகையில், தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 31-ஆகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சீரமைப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தி பேசும் மாநிலங்களின் இடங்கள் அதிகரித்து, தென்னக மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடமே அதிக உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள நிலையில், இது மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நீண்டகாலத் திட்டமாகும் என அவர் சாடியுள்ளார். இதன் மூலம் நிதிப் பகிர்விலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என்றும், இந்தியாவை ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என மாற்றும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த அநீதிக்குத் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் எனத் தனது அறிக்கையில் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
