திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நேற்று (பிப்ரவரி 21) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் முழக்கமிட்டார்.
தேர்தலை சந்திக்கும் திருநங்கை
அந்த மாநாட்டில், விளிம்புநிலை மக்களுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் திருநங்கை ரோசினி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்.
எப்போதும் மறக்க மாட்டோம்
இந்நிலையில் திருநங்கை வேட்பாளரை அறிமுகம் செய்ததற்காக மற்ற கட்சியினர் அந்த திருநங்கை இழிவுபடுத்துவதாக கூறிய இன்ஸ்டாகிராம் பிரபலம் திருநங்கை தனுஜா சிங்கம், இந்திய வரலாற்றிலேயே திருநங்கைக்கு முதல் முதலில் அரசியல் அங்கீகாரம் கொடுத்தது சீமான் தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், "இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோஸ் வெங்கட்ராமனை சீமான் அழைத்து வந்து நாம் தமிழரின் உறுப்பினராக்கினார். அடுத்ததாக ஸ்ரீதேவி என்ற திருநங்கையை தேர்தலை சந்திக்க வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்டதால் பெரும் பேசுபொருளானார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்படி சமஸ்கிருத சொற்களை ஏற்காததால் அவரின் பெயர் தேவி என்று மாற்றப்பட்டது. எனவே சீமான் பல ஆண்டுகளாகவே திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சீமான் திருநங்கைகளை கட்சிக்குள் அனுமதித்ததற்குப் பிறகு மற்ற கட்சிகள் திருநங்கைகளை அங்கீகரித்தது. எனவே திருநங்கிகளுக்கு முதல் கதவை திறந்து விட்ட சீமானை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்
