கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில், 88 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மூதாட்டியின் மருமகள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய மருமகள், மூதாட்டி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு சிறுவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவனைப் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீசார், அவரை திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பேரப்பிள்ளை வயதில் உள்ள ஒரு பள்ளி மாணவன், முதியவர் என்றும் பாராமல் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
