வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் (101) உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை அக்கட்சி மறுத்துள்ளது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருந்து வரும் நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து அவர் மறைந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி, அத்தகைய வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவர் குழு 24 மணி நேரமும் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும், தற்போது சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது.
