சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தபால் வாக்கு செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசினார். "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்று விளங்கிய தனது குடும்பத்தைச் சிதைத்த முழுப் பெருமையும் அன்புமணியின் மனைவி சவுமியாவையே சேரும் என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார். தனது பேத்திகளைத் தனக்கு எதிராகத் திசைதிருப்பிவிட்டதாகவும், பண பலத்தைக் கொண்டு கட்சியின் முன்னோடிகளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அன்புமணி குடும்பத்தினர் யாரும் நேரில் வரவில்லை என்றும், தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரிக்கவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார். தனக்கு வயதாகிவிட்டது, செயல்பட முடியாது என்று ஒரு பொய்யர் கூட்டம் பரப்பி வருவதாகவும், ஆனால் தான் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியைத் தன்னிடம் இருந்து அபகரித்துக்கொண்டதாகவும், அன்புமணி ஒரு நல்ல பிள்ளை இல்லை என்றும் சாடிய அவர், தனது நிழற்படத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இடையில் பேசிய ராமதாஸின் பேரன் முகுந்தன், எம்.எல்.ஏ சீட் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அன்புமணி மற்றும் சவுமியாவின் பணத்தாசையே குடும்பத்தைப் பிரித்ததாகவும் சவால் விடுத்தார். அன்புமணி தனது மகனுக்காகச் செய்த சமரசங்களால்தான் பாமக இன்று தனது அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
