தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் பணிகளில், அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுடன் இணைந்து வேட்புமனுத் தாக்கலை நிறைவு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 5) தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தம்பிதுரை தனது மனுவைச் சமர்ப்பித்தார். அவரைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற மேலவைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.
எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு
இந்த வேட்புமனுத் தாக்கலின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன், பாமகவின் 3 எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டு வேட்பாளர்களை முன்மொழிந்தனர். பாமகவில் மொத்தம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், இருவர் ராமதாஸ் அணியில் இருப்பதால், மீதமுள்ள மூவரின் ஆதரவுடன் அன்புமணி ராமதாஸ் களம் இறங்கியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக - பாமக இடையே எட்டப்பட்ட தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
