தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதிவியேற்றார்.
கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றார் . கோவாவைச் சேர்ந்த இவர், பிஜேபி தலைவராக, கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவிவிலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். 1956 அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள பிரிவு 153 படி, ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தமிழ்நாட்டுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநில அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
