தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 தொகுதிகளின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இன்று திங்கள்கிழமை (மே 11) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கூட்டணியின் சார்பில் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முறைப்படி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்க வந்தபோது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதல்வர் விஜய் எழுந்து நின்று கைகூப்பி தனது மரியாதையைத் தெரிவித்தார்.
கேப்டனுக்கு வெற்றியைச் சமர்ப்பித்த பிரேமலதா
பதவியேற்பு முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தன்னை வெற்றி பெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்த மகத்தான வெற்றியை தேமுதிகவின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்திற்குச் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் களத்தில் விருதாச்சலம் தொகுதி மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாரபட்சமின்றி நிறைவேற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தேமுதிகவின் நிலைப்பாடு
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரேமலதா, புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார். இருப்பினும், வரும் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றதால், தனது ஆதரவு எப்போதும் திமுக கூட்டணிக்கே இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுகவுடன் கைகோர்த்த தேமுதிகவுக்கு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
