சைவம், வைணவம் மற்றும் பெண்களுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி வரும் மே 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பொன்முடி, சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, அவர் தனது அமைச்சர் பதவியை இழக்கவும் காரணமாக அமைந்தது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த புகாரில், பொன்முடியின் பேச்சு பெண்களை இழிவுபடுத்துவதுடன் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சவுந்தரபாண்டியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் வழங்கிய சம்மனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இருப்பினும், இந்த மனுவை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் பொன்முடி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு மீண்டும் சம்மன் பிறப்பித்தார்.
