சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் நேற்று (ஏப்ரல் 12) தனது அணி வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேடையிலேயே மயக்கமடைந்தார். இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சின்னம் தொடர்பான சட்டப் போராட்டம்
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு இருந்ததால் 'மாம்பழம்' சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பிற்கே ஒதுக்கியது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றம் வரை சென்றும், மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்பிற்கே உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ராமதாஸ், சசிகலாவின் கட்சியுடன் கூட்டணி அமைத்து 'கேஸ் சிலிண்டர்' உள்ளிட்ட சின்னங்களில் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்.
தைலாபுரத்தில் அன்புமணி
ஒருபுறம் ராமதாஸ் சேலத்தில் பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த நிலையில், மறுபுறம் கடலூர் பிரச்சாரத்திற்குச் சென்ற அன்புமணி ராமதாஸ் வழியில் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று தனது தாயார் சரஸ்வதியைச் சந்தித்து உணவு அருந்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
