பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணி ராமதாஸ் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் ஒரு கட்சியின் செயல் தலைவராகப் பேசவில்லை, ராமதாஸின் மகளாகப் பேசுகிறேன் என்று குறிப்பிட்ட அவர், அன்புமணிதான் உண்மையான துரோகி என்று ஆவேசப்பட்டார். கட்சியின் அதிகாரத்தையும், தந்தையின் சொத்துக்களையும் அபகரித்துக் கொண்ட அன்புமணி, தங்களை துரோகி என்று சொல்வது வேடிக்கையானது என்றார்.
தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு அன்புமணி கட்சியில் பதவி வழங்கி, அவர்களைக் கொண்டாடுவதாக ஸ்ரீகாந்தி குற்றம் சாட்டினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு தாயாரின் சம்மதத்துடன் நடந்த ஒரு விஷயத்தை, இப்போதுதான் நடந்தது போலச் சித்தரித்து தந்தையின் பெயருக்கு அன்புமணி களங்கம் விளைவிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அரசியலுக்காகவோ, பணத்திற்காகவோ தாங்கள் தந்தையுடன் இல்லை என்றும், வயதான காலத்தில் பெற்றோருக்குத் துணையாக இருக்கவே உடன் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தந்தையைத் தனிமைப்படுத்த அன்புமணி திட்டமிட்டுச் செயல்பட்டதாகவும், ராமதாஸின் உடல்நிலை பாதிப்புக்கு அவரே காரணம் என்றும் ஸ்ரீகாந்தி கூறினார். "எனக்குப் பிறகு நீதான்" என்று தந்தை அறிவித்த பின்பும், ஸ்டாலின் காட்டிய பொறுமை கூட இல்லாமல் அன்புமணி அவசரப்படுவதாக விமர்சித்த அவர், ஒரு நல்ல பிள்ளையாக இருக்க முடியாதவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அன்புமணியை ஆதரிப்பது கட்சிக்கு ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.
