நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் திங்கள் கிழமையன்று 9 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் புகுந்து கோரத் தாண்டவமாடியது. அங்கிருந்த தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய அந்த கும்பல், சிதறி ஓடிய பொதுமக்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூரத் தாக்குதலில் பெரும்பத்தைச் சேர்ந்த ஜான் மார்க் மற்றும் வடமாநிலத் தொழிலாளி டிரீனத் காட்டா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை
மர்ம கும்பலின் இந்த கண்மூடித்தனமான வெறியாட்டத்தில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், இதே கும்பல் அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள்ளும் புகுந்து இருவரை வெட்டியது. காயமடைந்த 7 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுவதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டம்
இந்த வன்முறையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரியும் பெரும்பத்து கிராம மக்கள் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர்வாடி - நாங்குநேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி விடப்பட்டுள்ளது.
பலியான ஜானின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வன்முறைக்கான பின்னணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்ன குமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
