தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் எனப் பெரும் ஆளுமைகளுடன் பயணித்த அனுபவமிக்க 'பீஷ்மர்' பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் அணியிலிருந்து அதிரடியாக விலகி தனது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய இயக்கமான 'எம்ஜிஆர் அதிமுக'-வின் கொடியை அறிமுகப்படுத்தினார். கறுப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்ட இந்தக் கொடியுடன், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயரிய தாரக மந்திரத்தை கட்சியின் கொள்கையாக அவர் முன்மொழிந்துள்ளார்.
தனிநபர் அரசியலுக்கு விடைகொடுப்பு தமது விலகல் குறித்து வெளிப்படையாகப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஒரு தனி மனிதருக்காக ஒட்டுமொத்த வாழ்நாளையும் வீணடிக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்.
ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் என்பது மக்களுக்கானதே தவிர தனிநபருக்கானது அல்ல என்று சாடினார். ஓபிஎஸ்க்காக உயிரையா விட முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பிறப்பின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படாத ஒரு நீதிமிக்க சமுதாயத்தை உருவாக்குவதே தனது இலக்கு என்று அறிவித்தார்.
தேர்தல் களமும் அரசியல் கணக்குகளும் இந்த இயக்கம் உடனடியாகத் தேர்தலில் குதிப்பதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், இது ஒரு நீண்ட காலப் பயணம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்று தனது அரசியல் கணிப்பைக் கூறினார். தங்களது கொள்கை முடிவுகளுக்கு இணக்கமானவர்களைத் தேர்தலில் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திரைமறைவு பின்னணி ஓபிஎஸ் அணியில் நிலவி வந்த தேக்க நிலையும், டெல்லி தலைமை குறித்த அவரது தயக்கமுமே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயங்கியதால் அதிருப்தியடைந்த ஆதரவாளர்களின் குரலாக பண்ருட்டி ராமச்சந்திரன் உருவெடுத்துள்ளார். இதன் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிழல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் விஜய் கட்சிக்கு இவர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் கொள்கை முழக்கம்
புதிய கட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் விரிவான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் வரும் 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அன்று தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
