தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி மாற்றமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 27) திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி ஓ.பி.எஸ் தனது அரசியல் பயணத்தைத் திருப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் இந்த முக்கிய முடிவை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதன்பின்னரே முதல்வரைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் திமுகவில் நேரடியாகத் தன்னை இணைத்துக் கொள்வாரா அல்லது தனது ஆதரவாளர்களுடன் ஒரு கூட்டணியாகச் செயல்படுவாரா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஒரு முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப் போவதாக வெளியாகி இருக்கும் இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
