கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு தேர்தல் விதிமீறல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகப் பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்தத் தனித்தனி வழக்குகளை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி வாதிடுகையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும், ஆனால் விதிமுறைகளுக்கு மாறாகக் காவல்துறையினரே நேரடியாகப் புகார் அளித்து இந்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுள்ளதையும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் மீதான அந்த நான்கு வழக்குகளையும் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
