தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று சசிகலா தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர், கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்ட தனது புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். ஒன்பது ஆண்டுகளாகப் பொறுமை காத்தது போதும் என்று குறிப்பிட்ட அவர், இனி அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படப்போவதாகத் தொண்டர்களிடையே ஆவேசமாக உரையாற்றினார்.
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், சசிகலாவின் இந்தத் தனித்த அரசியல் முடிவு தமிழக தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்த சசிகலா, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகளாகத் தங்களை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் திடீர் அறிவிப்பு அதிமுக மற்றும் இதர அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
