சென்னையில் நடைபெற்ற நம்பிக்கை ஊடகத்தின் உலகளாவிய தொடக்க விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
தமிழர் உருவாகியுள்ள வெளிச்சம்
அதில் பேசிய அவர், "செய்கின்ற சொல்லில், செயலில், தொழிலில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையாக தான் மலேசியாவில் உருவெடுத்து இன்று இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் தனது கால் தடத்தை பதித்து உள்ளது. தமிழன் எங்கு சென்றாலும் அவன் நம்பிக்கையை கொடுப்பான். அதன் வெளிப்பாடு தான் இந்த நம்பிக்கை ஊடகம். தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த வெளிச்சம் (நம்பிக்கை) மெம்மேலும் வளர்ந்து பல நாடுகளில் கால் ஊன்ற வேண்டும்" என்று தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் சொன்ன குட்டி ஸ்டோரி
தமிழர்கள் என்றால் நம்பிக்கைக்குரியவர்கள் தான் என்று கூறிய அமைச்சர் நாசர், அதற்கு ஒரு வரலாற்று நிகழ்வையும் சுட்டிக் காட்டி பேசினார். சிங்கப்பூரில் வாழும் தமிழ் அல்லாத பிற மொழி பேசக்கூடிய இந்தியர்கள், ஒருமுறை சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவை சந்தித்து தமிழ் மொழியை அங்கீகரித்தது போல எங்கள் மொழியையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் லீ குவான் யூ அதை உறுதியாக ஏற்க மறுத்ததோடு, தமிழர்கள் எங்களோடு இரண்டற கலந்தவர்கள், இந்த மண்ணில் அவர்களின் இரத்தம் கலந்து உள்ளது. எங்களுக்கு இந்தியர்கள் என்றால் தமிழர்கள் தான் என்று கூறிவிட்டதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
