மலேசியாவில் 27 ஆண்டுகள் மக்களின் மனதில் இடம் பிடித்த நம்பிக்கை செய்திகள், தற்பொழுது இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் தனது கால் தடத்தை பதித்துள்ளது. இந்த தொடக்க நிகழ்வில் அனைத்து கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடக துறையினர் என பலரும் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் பிரம்மாண்ட விழாவில் நம்பிக்கை ஊடகத்தின் நிறுவனர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு
இந்நிகழ்வில் பேசிய அவர், "வெற்றியின் அடிப்படையில் மக்களை முன்னேற செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் நம்பிக்கை தமிழ் மாத இதழ் தொடங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூலான திருகுர்ஆனில் 'நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்' என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டு 'நம்பிக்கை' என்ற பெயரில் மாத இதழ் தொடங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
கடந்து வந்த பாதை
நம்பிக்கை கடந்து வந்த பாதை குறித்து அவர் பேசுகையில், "கொரோனா பெருந்தொற்று காலத்தில், மாத இதழ் நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்று வழியாக நம்பிக்கை செய்திகளை உலக தமிழர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டலாக மாற்றப்பட்டது. அப்பொழுது போடப்பட்ட விதை இப்பொழுது விருச்சமாக மாறி இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் வளர்ந்து உள்ளது. பல கரங்களால் சேர்ந்து தூக்கி நிறுத்தபட்ட இந்த 'நம்பிக்கை' வலிமையோடு பயணிக்கட்டும்" என்று தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
