சென்னையில் நடைபெற்ற நம்பிக்கை ஊடகத்தின் உலகளாவிய தொடக்க விழாவில் தாப்பா (மலேசியா) நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
உச்சத்தை தொட இருக்கும் 'நம்பிக்கை'
இந்த நிகழ்வில் பேசிய அவர், "தமிழகத்திற்கு வெளியே அதிகமாக தமிழர்கள் வசிக்கும் நாடு மலேசியா. அங்கிருந்து பலர் தமிழ்நாட்டிற்கு வந்து வெற்றிக் கொடி நாட்ட முயன்றார்கள். ஆனால் அதில் மலேசியா ரவிச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகிய இருவர் மட்டும் தான் சினிமாவில் உச்சத்தை அடைந்து வெற்றி பெற்றனர். இவர்களுக்கு அடுத்து உச்சத்தை தொட இருப்பது நம்பிக்கை தான்" என்று அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை இனி பாலமாய் அமையும்
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "உலகில் இரண்டு துறை மட்டும் தான் தர்மத்தோடு ஒப்பிடப்படுகிறது. ஒன்று பத்திரிகை தர்மம்; மற்றொன்று யுத்த தர்மம். பேனா முனையும் சரி, வாள் முனையும் சரி ஒருவரை வாழவும் வீழவும் வைக்கும். அந்த வகையில் மலேசியாவில் மரியாதைக்குரிய ஊடகமாக நம்பிக்கை வலம் வருகிறது. அதே போல் இந்தியாவிலும் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கை ஊடகத்தின் தொடக்கம் காலத்தின் கட்டாயம். நம்பிக்கை இரு நாட்டுக்கும் பாலமாய் அமையும்" என்று அவர் கூறினார்.
