தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு சவால் விடும் வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். திருச்சி ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட மாநில மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து சீமான் வரலாறு படைக்க உள்ளார்.
தனிப்பாதை மற்றும் கொள்கை உறுதி
திராவிடக் கட்சிகளுக்கும் மற்ற மாற்றுக் கட்சிகளுக்கும் இடையே நாம் தமிழர் கட்சி தனது 'தனித்துப் போட்டி' என்ற பிடிவாதமான நிலைப்பாட்டை இந்த முறையும் உறுதி செய்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "கொள்கை வேறுபாடு" காரணமாக அந்த வாய்ப்பை சீமான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 2010-ல் கட்சி தொடங்கப்பட்டது முதல் இன்று வரை எவருடனும் கூட்டணி இன்றி தேர்தலைச் சந்திக்கும் தனது மரபை அவர் 2026 தேர்தலிலும் தொடர்கிறார்.
காரைக்குடியில் களம் காணும் சீமான்?
இந்த மாநாட்டின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு, ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான். தற்போதைய தகவல்களின்படி, அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தனிப்பட்ட முறையில் 24% வாக்குகளைப் பெற்ற சீமான், இந்த முறை தனது சொந்த மண்ணில் களம் காண்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிப் பாதையில் ஏறுமுகம் காணும் வாக்கு வங்கி
2016-ல் வெறும் 1 சதவீதத்தில் தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் பயணம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீதத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தனது பலத்தை இரட்டிப்பாக்கி வரும் சீமான், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, வழக்கம் போல 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கி, பாலின சமத்துவத்தை அரசியலில் நிலைநாட்டும் தனது தனித்துவமான பாணியை அவர் இப்போதும் கடைப்பிடித்துள்ளார்.
