அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், பெரும்பான்மை இல்லாமல் இருந்த தவெக அரசுக்கு 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. மேலும் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய 3 கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தது. இந்த சூழலில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களில் ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் அக்கட்சி இரண்டாக பிளந்தது. இந்த சூழலில் 3 எம்.எல்.ஏ.,க்கள் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றுள்ளனர். மேலும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.
ஏற்கனவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக ஒரு தரப்பு, அமமுக ஒரு எம்.எல்.ஏ., தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் குதிரை பேரம் எனப்படும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.,க்கள் இணைந்திருப்பது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?.. ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
