தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 22-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் தேறி வீடு திரும்பியிருந்தார்.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று திடீரென அவருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகரித்தது. இதனால் கூடுதல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
