தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக முடுக்கிவிட்டுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவின் உயர்மட்டக் குழு, நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் முதற்கட்டப் பேச்சை நடத்தியது. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட அவர்களுக்கு, இந்த முறை இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தத் தொடர் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இன்று அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனிச் சின்னத்தில் மதிமுக!
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக நிர்வாகிகள், வரவிருக்கும் தேர்தலில் தங்களது கட்சியினரின் விருப்பப்படி தனிச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். கடந்த காலங்களில் நிலவிய சின்னம் குறித்த குழப்பங்களுக்கு இடமளிக்காமல், இம்முறை சுய அடையாளத்துடன் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அவர்கள் கூறினர். மேலும், சட்டமன்றத் தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடத்தையும் திமுகவிடம் கோரியுள்ளதாகத் தெரிகிறது. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகே தெரியவரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
