சென்னையில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற திரைப்படச் சங்க தேர்தலின் பின்னர் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதையடுத்து நடைபெற்ற முதல் பொதுக்குழு கூட்டமாக இது அமைந்தது. இதில் தலைவர் G. K. தமிழ் குமரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய தீர்மானம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக, இனி தமிழ் திரைப்படங்களில் நடிகர்களுக்கு நிரந்தர சம்பளம் வழங்கும் முறையை மாற்றி, “வருவாய் பகிர்வு” (Revenue Share) முறை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, திரைப்படம் வெளியான பின் கிடைக்கும் மொத்த வருவாயில் இருந்து நடிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த முறை ஏற்கனவே தெலுங்கு சினிமா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டனர். அதேபோல், தமிழ் திரைப்படத் துறையிலும் இதை நடைமுறைப்படுத்துவது தயாரிப்பாளர்களின் நலனை பாதுகாக்கும் என்றும் கூட்டத்தில் கருத்து வெளியிடப்பட்டது.
அடையாள வேலைநிறுத்தம் அறிவிப்பு
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், வரும் மே 2ஆம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கும், திரைப்படத் துறையினருக்கும் கவனம் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
