திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தி முறைகேட்டை கண்டுபிடித்த நிலையில் தற்போது அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயில்
தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளது. பிற படை வீடுகள் மலைக்குன்று மேல் இருக்கும் நிலையில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரை ஸ்தலமாக காணப்படுகிறது.
முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம் உள்ளிட்ட பல பெருமைகளை உள்ளடக்கிய திருச்செந்தூர் சிறந்த குரு ஸ்தலமாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இப்படியான நிலையில் திருச்செந்தூரில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு விதமான நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கான இடம், நாழிக்கிணறு செல்லும் பாதை சீரமைப்பு, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் காத்திருப்பு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
தலைகீழாக மரிய திருச்செந்தூர்
ஆனால் அதன் பிறகு திருச்செந்தூரில் எளிதாக சாமி தரிசனம் செய்வது என்பது இயலாத காரியமாக மாறிவிட்டது. இலவச தரிசனம், ரூ.100 தரிசனம், முதியோர்கள் தனி வரிசை என பல வகைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கோயிலின் பிரதான வாயிலாக அறியப்படும் சண்முக விலாச மண்டபம் வழியாக நேரடியாக சாமி தரிசனம் செய்ய கடந்த காலங்களில் பணம் வசூலிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். நிலவரத்தைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தை பங்குப் போடுவதில் அர்ச்சகர்களும் அங்கு காவலாளிகளாக பணியாற்றியவர்களும் ஒரு ஒப்பந்தம் கொண்டிருந்தனர்.
ஆட்சி மாறியதும் மாறிய காட்சி
இது தொடர்பாக திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபுவுக்கு பல புகார்கள் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் சென்ற நிலையில் எதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர் ரமேஷிடம் திருச்செந்தூர் கோயில் முறைகேடு தொடர்பாக பலரும் புகார்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கடந்த வாரம் அதிகாலையில் மாஸ்க் அணிந்தவாறு ரகசியமாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷிடம், அவர் அமைச்சர் என தெரியாமலேயே விரைவு தரிசனம் செய்ய ரூ.1,000 பணம் தருமாறு அங்கிருக்கும் அர்ச்சகர் ஒருவரும், இரண்டு காவலாளிகளும் கேட்டுள்ளனர். அதன் பின்னர் வந்திருப்பது அறநிலையத்துறை அமைச்சர் என தெரிந்ததும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் ஆட்டம் கண்டுவிட்டது.
சம்பந்தப்பட்ட அர்ச்சகர், அங்கு பணியில் இருந்த காவலாளிகள், மேலும் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பணம் கேட்டதாக இரு நபர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிம்மதியாக தரிசனம் செய்யும் பக்தர்கள்
அமைச்சர் ரமேஷின் இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த ஆய்வுக்குப் பிறகு திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது மிக எளிதாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் குறைந்தது 4 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டு மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் விரைவு தரிசனம் செய்வதற்கு சண்முக விலாசம் வாயில் வழியாக பக்தர்கள் பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது அங்கு அர்ச்சகர், காவலாளிகள் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருக்கும் போலீசார் சண்முக விலாசம் வாயிலை தேடி வரும் பக்தர்களை வரிசைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கோயிலின் அடிப்படை வசதிகளை உறுதி செய்யுமாறு அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பக்தர்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திருச்செந்தூரில் மிகப்பெரிய மாற்றம் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அரங்கேறியுள்ளது அனைவருக்கும் மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
