2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கியக் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக, நேற்று மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நண்பகல் திடீர் பயணமாக கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனநாயகத்திற்கு எதிரானது
பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து, தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, மதுரைக் கூட்டத்தில் "ஆட்சியில் பங்கு" என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறி அதிர வைத்தார்.
மேலும், மாணிக்கம் தாகூர் எம்பி-யின் தன்னிச்சையான பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் பகிரங்கமாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இந்தத் திடீர் பயணத்தின் பின்னணியில், மதுரைக் கூட்டத்தின் குழப்பங்களுக்கும், கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மாணிக்கம் தாகூருக்கும் எதிராக மேலிடத்தில் புகார் அளிக்கவே செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, திமுக - காங்கிரஸ் இடையிலான இந்த மோதல் போக்கு 2026 தேர்தல் கூட்டணியில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
