திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பலமுறை இதே கோரிக்கையுடன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் ஏன் இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் மற்ற முக்கியமான பிரச்சனைகளை விட நீதிமன்றத்திற்கு வேறு வேலையில்லையா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளம்பர நோக்கத்திற்காகவே இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகச் சாடினர்.
மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள், இத்தகைய வழக்குகளால் அரசுக்குத் தேவையற்ற நிதிச் சுமை ஏற்படுவதாக வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து, மனுதாரருக்கு முதலில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் மனுதாரர் தரப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தனர். மேலும், இனிமேல் இதுபோன்ற தேவையற்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே அபராதத்தைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
