சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகாரை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டுப் புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், தனிப்படை போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான காவல் மரண வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் மீது சுமத்தப்பட்ட நகை திருட்டுப் புகார் குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. திருடு போனதாகக் கூறப்படும் நகைகளைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், அந்தப் புகாரை முடித்து வைக்கத் தீர்மானித்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் புகார் அளித்த நிகிதாவும் நேரில் ஆஜராகி எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் எழுத்துப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதே சமயம், அவரது மரணத்திற்கு காரணமான சிபிஐ தொடர்ந்த கொலை வழக்குத் தனியாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
