கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாகக் கூடுதல் விளக்கங்களைப் பெற அவரை மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
இன்று (மார்ச் 10, செவ்வாய்க்கிழமை) டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட இந்தச் சம்மனுக்குப் பதிலளித்துள்ள விஜய் தரப்பு, தற்போதுள்ள தேர்தல் பணிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உடனடியாக வர இயலாது எனத் தெரிவித்துள்ளது. இதனால் விசாரணைக்கு ஆஜராக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், முடிந்தால் இந்த விசாரணையை டெல்லிக்கு பதிலாகத் தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்றும் சிபிஐ-யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில், அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் மக்கள் கூடியது எப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் மற்றும் விஜய்யின் வருகை தாமதமானது கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்ததா போன்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் வரும் மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தச் சிபிஐ விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
