பரப்புரையில் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தடையின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் தவெக அனுமதிக்காது என்று குறிப்பிட்ட அவர், ரேஷன் கடைகளில் அரிசி நீங்கலாக மற்ற பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்படும் என்றார். குறிப்பாக, 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு 50 சதவீதக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
முதல்வர் பதவியும் சசிகலா - எடப்பாடி சந்திப்பும்
அதிமுகவில் இருந்தபோது நடந்த மறைமுக அரசியல் குறித்துப் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் தான் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்க வேண்டிய சூழலை விவரித்தார். "அன்று இரவு வரை நான்தான் அடுத்த முதல்வர் என்று உறுதியாக இருந்தது; ஆனால் மறுநாள் காலை காட்சிகள் மாறிவிட்டன. ஒருவரிடம் பெட்டி இருந்தது, என்னிடம் இல்லை" என்று சூசகமாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிறகு சசிகலாவிடம் பேசியபோது இயக்கத்தின் ஒற்றுமையே முக்கியம் என தான் தெரிவித்ததாகக் கூறினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராகச் சசிகலா அறிவித்தபோது, "செங்கோட்டையனும் இதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார், கவலை வேண்டாம்" என சசிகலா எடப்பாடியின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அந்தத் தருணத்தில், எடப்பாடி பழனிசாமி ஒரு மலைப்பாம்பைப் போலச் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார் என்று செங்கோட்டையன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
