தமிழகத்தில் 'மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை' பெறும் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில், இன்று காலை முன்பணமாக 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்த அதிரடியான மற்றும் தொலைநோக்குடைய நடவடிக்கையானது, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார்.
குடும்பப் பொருளாதாரத்திற்கு உடனடி நிவாரம்
சாமானியப் பெண்கள் தங்களின் அன்றாட வீட்டுச் செலவுகள், பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் மருத்துவத் தேவைகளைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்த 5,000 ரூபாய் முன்பணம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது பெண்களுக்கு உடனடி நிவாரம் அளிப்பது மட்டுமின்றி, அவர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையையும், வாழ்வாதாரத்திற்கான உறுதியான ஆதரவையும் வழங்கும் என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் முட்டுக்கட்டைகளை முறியடித்த முதலமைச்சர்
தமிழகத்திற்குத் தர வேண்டிய நியாயமான நிதிப் பங்கீட்டை வழங்க மறுக்கும் மத்திய அரசு, தேர்தல் காலத்தைக் காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முடக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய முட்டுக்கட்டைகளைத் தனது சாதுரியமான நடவடிக்கையால் முறியடித்து, பெண்களுக்குச் சேர வேண்டிய நிதியை முன்கூட்டியே வழங்கிய முதலமைச்சரின் மெச்சத்தக்கச் செயலை மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கிறது.
கோடைக் காலச் செலவுகள் மற்றும் கல்வித் தேவைகள்
வரவிருக்கும் மாதங்கள் கோடைக் காலம் என்பதாலும், பள்ளிக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், பெண்களின் நிலையைக் கருணையோடு சிந்தித்து இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளைச் சரியாகக் கணித்துச் செயல்படும் முதலமைச்சரின் இந்த மனிதநேயப் பண்பு பாராட்டத்தக்கது. மேலும், 'திராவிட மாடல் ஆட்சி 2.0' அமைந்த பிறகு, மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
