தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஒரு மாநிலக் கட்சித் தலைவரின் வீட்டிலேயே ஐடி ரெய்டு நடத்தப்படுவது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜனநாயகத்தைச் சிதைக்கும் முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
இந்தச் சோதனை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, இது ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளைத் தடுக்கும் முயற்சி என்று சாடியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவுள்ள நிலையில், அங்குச் செல்லவிடாமல் தன்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள்ளேயே முடக்கி வைப்பதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கையாகவே இதைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவரின் பரப்புரையை முடக்க நினைக்கும் இந்தச் சதிச் செயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து மத்திய பாஜக அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/2046102585090998412
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய 48 மணி நேரமே உள்ள நிலையில், தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சியினரை முடக்க இத்தகைய அட்டூழியங்களை பாஜக அரசு அரங்கேற்றி வருவதாக அவர் சாடியுள்ளார். இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் முதலமைச்சர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
