தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ஆனந்தம் சில்க்ஸ் (Anandham Silks) நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகார்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடைகளின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வெளி நபர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இது தவிர, தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ், போத்தீஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி உள்ளிட்ட 103-க்கும் மேற்பட்ட முன்னணி துணிக்கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.இந்தச் சோதனை காரணமாக ஜவுளித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
