தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. ஆளும் கட்சியான திமுக தனது தற்போதைய கூட்டணியை உறுதிப்படுத்தி வரும் வேளையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்றன. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி, தங்களுக்கு 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், அதிமுக தரப்பில் இதற்கு உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் நிற்கிறது.
திமுகவின் 'மாஸ்டர் பிளான்'
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு இருக்கும் பலமான வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள திமுக இந்த முயற்சியை எடுத்துள்ளது. திமுக தரப்பிலிருந்து புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள புதிய தமிழகம், தனிச் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களில் இறுதி முடிவு
இது குறித்துப் புதிய தமிழகம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “திமுக தரப்பில் எங்களை அணுகியது உண்மைதான். தென் மாவட்டங்களில் எங்களுடைய செல்வாக்கை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே உள்ளது. எனவே, எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
