தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கரின் பழைய மற்றும் புதிய அலுவலகங்கள் மற்றும் அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மேலும், பழனியப்பா தெருவில் உள்ள அவரது வீடு, கரூர் - கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மற்றும் அதன் உரிமையாளர் மணி, சக்தி மெஸ் மற்றும் அதன் உரிமையாளர் கார்த்தி ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன், சுமார் 15 வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
தொடரும் சோதனைகளும் அரசியல் பின்னணியும்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியத் தொழிலதிபர்கள் மீதான இந்தச் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கரூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.தியாகராஜனுக்குச் சொந்தமான இடங்களிலும், ஏப்ரல் 13-ம் தேதி க.பரமத்தி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் இத்தகைய நடவடிக்கைகள் கரூரில் அரசியல் அனலைக் கூட்டியுள்ளன.
