பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு அன்புமணி ராமதாஸுக்குத் தடை விதிக்கக் கோரியும், தன்னை கட்சியின் தலைவராக அங்கீகரிக்கக் கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு வழங்கிய அங்கீகாரக் கடிதத்தைச் செல்லாததாக்க வேண்டும் என்பதும் அவரது மனுவின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த வழக்கை முன்கூட்டியே தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மார்ச் 13-ம் தேதி இரு தரப்பு வாதங்களைக் கேட்க உரிமையியல் நீதிமன்றம் திட்டமிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு
இந்தச் சூழலில், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் தன்னை ஒரு தரப்பாக இணைக்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
