கடந்த 2018-ஆம் ஆண்டு பெரியார் சிலை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது மற்றும் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த 2024-ல் அவருக்கு தலா 6 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ஹெச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறை தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
தற்போது தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதைக் காரணம்காட்டி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஹெச். ராஜாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தளர்த்தினார். அதன்படி, அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம் என்றும் உத்தரவிட்டு அவருக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளார்.
