கோடைக்காலத்தில் அதிகரிக்கும் அதீத வெப்பநிலை மற்றும் உராய்வினால் ஏற்படும் அபாயங்களை முன்னிட்டு, பட்டாசு உற்பத்தி ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, கோடை காலத்தில் பட்டாசு உற்பத்தி பணிகள் காலை நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெடிபொருட்கள் கலக்கும் பணிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) வலியுறுத்தியுள்ளது.
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக ரசாயனங்களில் ஏற்படும் உராய்வினால் தீப்பற்றும் அபாயத்தை குறைக்க, ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை முழுமையாக தவிர்க்கும் நோக்கில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் மூலம் கோடைக்காலத்தில் ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சாலை நிர்வாகங்களும், தொழிலாளர்களும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
