நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக் குளத்திலிருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், இன்று காலை கார் ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வள்ளியூர் டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி. பிரசன்ன குமார் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் காரைச் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் நான்கு பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் கருகிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அந்தச் சடலங்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருந்து முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. காரின் என்ஜின் எண் மற்றும் பதிவு எண்ணை வைத்து உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
