சிவகங்கையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு, தனது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த செய்தி பேரிடியாக அமைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்த்தி அனுப்பிய தந்தை
சிவகங்கை நகரைச் சேர்ந்த மாணவன் ஹர்திக் ராஜலிங்கம், இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதச் சென்றார். இன்று காலை தனது மகனை அன்போடு வாழ்த்தி, தேர்வுக்கு வழியனுப்பி வைத்துள்ளார் அவரது தந்தை செந்தில்குமார். தந்தையின் ஆசியோடு தேர்வு மையத்திற்குச் சென்ற மாணவன், முதல் நாளான தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதி முடித்தார்.
வீடு திரும்பியபோது நேர்ந்த துயரம்
தேர்வைச் சிறப்பாக எழுதி முடித்துவிட்டு, மிகுந்த உற்சாகத்துடன் அந்தத் தகவலைத் தந்தையிடம் பகிர ஓடிவந்த மாணவன் ஹர்திக் ராஜலிங்கத்திற்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் தந்தை செந்தில்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அந்த மாணவன் நிலைகுலைந்து போனார். காலையில் தன்னை வாழ்த்தி அனுப்பிய தந்தை, மாலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அந்த மாணவன் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.
