தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாதுகாப்பின்மையும் தினசரி செய்திகளாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தபோது காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கு திமுக ஆட்சியின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விமர்சித்துள்ளார். நன்கு படித்து முன்னேறத் துடித்த ஒரு மாணவியின் விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப் பெண்ணின் நடத்தையைச் சந்தேகப்படும் வகையில் போலீசார் பேசியிருப்பது சீர்கெட்டுப் போன நிர்வாகத்தின் அடையாளம் என அவர் சாடியுள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினரின் தலையீடு குறித்து கேள்வி
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராடி வரும் நிலையில், அங்கு சென்று திமுக சட்டமன்ற உறுப்பினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்தாலே போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் சூழலில், எதையாவது மறைக்கவோ அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றவோ திமுக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பியுள்ளார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய 'மாடல்' திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
